டெல்லி தற்கொலையில் மீண்டும் திடுக்: சாக மாட்டோம் என நினைத்து இறந்த குடும்பம்!

டெல்லி தற்கொலையில் மீண்டும் திடுக்: சாக மாட்டோம் என நினைத்து இறந்த குடும்பம்!
டெல்லி தற்கொலையில் மீண்டும் திடுக்: சாக மாட்டோம் என நினைத்து இறந்த குடும்பம்!

டெல்லியில் ஒரே வீட்டில் உயிரிழந்த 11 பேரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது சி.சி.டி.வி. காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டாலும், இறக்கும் முடிவுடன் அவர்கள் தூக்கிட்டுக் கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி திகில் வீடு பற்றி தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகின்றன. அது என்ன திகில் வீடு? பாட்டியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த வீட்டை புராரி வாசிகளும், வட இந்திய ஊடகத்தினரும் அப்படித்தான் அழைக்கின்றனர். திகில் வீட்டை பற்றி பேசாத புராரி வாசிகளே இல்லை எனலாம். 4ஏ‌‌ தெருவில் உள்ள திகில் வீட்டை கடந்து செல்பவர்கள் அதன் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள 11 பைப்புகளை அச்சத்துடன் பார்த்தபடியே செல்கின்றனர். அந்த 11 பைப்புகள்தான் தங்கள் ஆன்மாவை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் SHORT CUT என்று பாட்டியா குடும்பத்தினர் நம்பினர். அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டது சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்காக 5 நாற்காலிகளை அவர்கள் வாங்கி வந்ததாகவும், 5 நாற்காலிகளை பயன்படுத்தி 9 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திகில் வீட்டில் இருந்து 11 டைரிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன. அதில் இருக்கும் குறிப்புகள் மூலம் பாட்டியா குடும்பத்தினர் புதிரான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டிருந்தது தெரியவந்தது. சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று அந்த டைரிகளில் எழுதப்பட்டிருந்தது. ஜூன் 30-ம் தேதி கடவுளை காணச் செல்கிறோம் என்றும் பாட்டியா குடும்பத்தினர் டைரியில் எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 11 டைரிகளில் உள்ள குறிப்புகள் கடந்த 11 ஆண்டுகளாக எழுதப்பட்டவை என்று கூறப்படுகிறது.

11 டைரிகளில் உள்ள அமானுஷ்ய குறிப்புகளை கூறி‌யது திகில் வீட்டின் தலைவர் நாராயண் தேவியின் 2-அவது மகன் லலித் சுண்டவத். பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக எண்ணி ஒரு மாய உலகில் வாழ்ந்துள்ளார் லலித். மோட்சத்தை அடைய தற்கொலை தான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரிடம் லலித் தெரிவித்துள்ளார். மோட்சம் குறித்த லலித்தின் மாயக் கனவுகளை டைரிகளில் குறிப்பெடுத்தவர் நாராயண் தேவியின் மகள் வழிப் பேத்தியான பிரியங்கா. லலித்தின் மாயக்கனவுகள் பிரியங்காவின் கல்யாணக் கனவை கலைத்துவிட்டது. பிரியங்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுபவை என்று சொல்வதுண்டு. ஒரு வேளை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை அங்கேயே சென்று நடத்திக் கொள்ளலாம் என்று பிரியங்காவிடம் லலித் கூறினாரோ என்னவோ?

சி.சி.டி.வி காட்சியும், முதலில் கிடைத்த 3 டைரிகளில் இருந்த குறிப்புகளும் பாட்டியா குடும்பத்தினருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது என்பதை உறுதி செய்வதாக காவல்துறையினர் கூறி இருக்கின்றனர். ஆனால் கடைசியாக கிடைத்துள்ள 11-ஆவது டைரியில் இருக்கும் குறிப்பு, பாட்டியா குடும்பத்தினருக்கு இறக்கும் எண்ணம் இல்லை என்று கூறுகிறது. ஒரு கோப்பையில் தண்ணீரை வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளுங்கள், நீங்கள் இறப்பதற்கு முன்பு தண்ணீரின் நிறம் மாறும். அப்போது நான் வந்து உங்களை காப்போற்றுவேன் என்று லலித்தின் தந்தை கோபால் தாஸ் தெரிவித்ததாக அந்த அமானுஷ்ய குறிப்பு கூறுகிறது. 11 பேரும் தற்கொலை செய்து கொண்ட அன்று இந்த வாசகங்கள் டைரியில் எழுதப்பட்டு இருக்கின்றன. நமது தந்தை கோபால் தாஸ் வந்து நம்மை காப்பார் என்று மாய உலகில் வாழ்ந்த லலித் கூறியதை பிரியங்கா எழுதி வைத்திருக்கிறார். ஆனால் கடைசி வரை தண்ணீரின் நிறம் மாறவில்லை. அழுதழுது பாட்டியா குடும்ப உறவினர்களின் கண்கள் தான் நிறம் மாறியிருக்கின்றன. எதற்காக இறக்கிறோம் என்று தெரியாமல் இறந்தவர்கள் உண்டு. ஆனால் இறக்க மாட்டோம் என்று இறப்பை தேடிச் சென்று இறந்து போனவர்கள் பாட்டியா குடும்பத்தினர்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com