புலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது!

புலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது!
புலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது!

புலந்த்ஷர் வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொன்றது தொடர்பாக, ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள மஹ்வா கிராமத்தின் வனப்பகுதியில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, சட்டவிரோத பசு வதைக்கூடம் செயல்படுவதாக் கூறி கிராமத்திற்குள் திரண்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

 சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றும் அவர்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்தனர். இதனால் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

இந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டார். போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலில் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் மீது வன்முறையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோத் குமார் சிங்கை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று இதுவரை பேசப்பட்டது. இந்நிலையில், சுபோத் குமார் சிங் கொலையில் ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை தொடர்பாக வெளியான வீடியோ பதிவில் ஜித்து பவுஜி என்ற ராணுவ வீரர் இடம்பெற்றுள்ளார். 

வன்முறை தொடர்பான வீடியோ பதிவுகளில் தன் மகனை பார்க்கவில்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார். இருப்பினும், வன்முறை நடந்த இடத்தில் ஜித்து இருந்ததாக அவரது உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

 “வன்முறை நடந்த இடத்தில் இருந்து வந்து, ‘நாடகத்தை பாருங்கள்’ என்று கூறிவிட்டு அன்று மாலையே கார்கில் சென்றுவிட்டார்” என்று ஜித்தின் அத்தை சந்திரவதி கூறினார்.

  வன்முறை தொடர்பான வீடியோ ஒன்றில் ‘அவனுடைய துப்பாக்கியை எடு’ என்று ஒரு குரல் பேசுகிறது. கூர்மையான ஆயுதங்களால் சுபோத் குமார் தாக்கப்பட்டுள்ளார். பின்னர், அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுபோத் குமார் சிங் இருந்த இடத்தில் ஜித்து பவுஜி இருந்துள்ளார். இரண்டு போலீஸ் குழுக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு ஜித்துவை விசாரிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

காஷ்மீர் சென்ற போலீசார், அங்கு ராணுவ வீரர் ஜிதேந்திர மாலிக் என்ற ஜீத்து பவுஜியை கைது செய்துள்ளனர். ராணுவம் அவரை இன்று அதிகாலை 12.50 மணியளவில் போலீசாரிடம் ஒப்படைத்தது. அவரிடம் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்திய போலீசார், புலந்த்ஷருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com