‘கோஷங்கள் வேண்டாம்..ராணுவத்தில் சேருங்கள்’ விமானப்படை வீரரின் மனைவி வேண்டுகோள்

‘கோஷங்கள் வேண்டாம்..ராணுவத்தில் சேருங்கள்’ விமானப்படை வீரரின் மனைவி வேண்டுகோள்
‘கோஷங்கள் வேண்டாம்..ராணுவத்தில் சேருங்கள்’ விமானப்படை வீரரின் மனைவி வேண்டுகோள்

வெறும் கோஷங்களை எழுப்பாதீர்கள் எனவும் பாதுகாப்பு படையில் சேர்ந்து நாட்டுக்கு உதவுங்கள் எனவும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரரின் மனைவி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் கடந்த புதன்கிழமை எம்.ஐ.–17 ரக ஹெலிகாப்டர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி, கிழே விழுந்து நொறுங்கியது. அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானப்படை வீரர்கள் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களுள் நினட் மண்டவ்கானும் ஒருவர். இவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அப்போது வீரவணக்கம் செலுத்த வந்த பொதுமக்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ எனவும் ‘வந்தே மாதரம்’ எனவும் கோஷங்களை எழுப்பினர். 

இதையடுத்து பேசிய வீரர் நினட் மண்டவ்கானின் மனைவி விஜேதா, “வெறும் கோஷங்களை எழுப்பாதீர்கள். ‘ஜிந்தாபாத் அல்லது முர்தாபாத்’ இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தால் பாதுகாப்பு படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்யுங்கள். அல்லது உங்கள் குடும்பத்தில் யாரையேனும் பாதுகாப்பு படையில் சேர்க்க ஊக்குவியுங்கள். 

அதுவும் செய்ய முடியவில்லை எனில், நாட்டிற்கு சின்ன சின்ன உதவிகள் செய்யுங்கள். அதாவது, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள். பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள். பெண்களை துன்புறுத்தாதீர்கள். வகுப்புவாத வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள். என் குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த எனது கணவர் சமாதானமாக ஓய்வெடுக்கிறார்” எனத் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com