கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வருகிறது. ஆட்கொல்லி நோயான கொரோனாவை விரட்ட உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது என்பதையே அரசு பிரதானமாக கூறி வருகிறது. இதனால் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன.
இந்நிலையில் அவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரிபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் விவேக் பன்சால் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெற விரும்புபவர்கள் தொலைபேசி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை எனவும் விவேக் பன்சால் தெரிவித்துள்ளார்.