கலவர பாதிப்புகளுக்கு இழப்பீடு: சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கலவரங்களின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு அளவை நிர்ணயம் செய்யும் சட்டத்தை கொண்டு வர வேண்டு்மென உச்ச நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
கலவரங்கள், போராட்டங்களின் போது ஏற்படும் வன்முறைகள், மோதல்களால் உயிர்கள் பறிபோவதுடன் பொது சொத்துகளும் நாசப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என ஏ.கே.கோயல், யு.யு.லலித் அடங்கிய நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
வன்முறைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே விதிகள் இருந்தாலும் அவை பலன் தரவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் உயிரிழப்பு, சொத்துகளை நாசப்படுத்துவது உள்ளிட்ட பாதிப்புகளுக்கு யாரை பொறுப்பாக்குவது, எவ்வளவு இழப்பீடு நிர்ணயம் செய்வது போன்ற அம்சங்களுடன் விரிவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்