ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்: மணமகன் வீட்டிற்கு 80கிமீ நடந்தே சென்ற மணமகள்!!
ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போனதால் மணமகனின் வீட்டைத் தேடி மணமகள் 80கிமீ நடந்தே சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் நான்காவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் திருமணம் தள்ளிப்போனதால் மணமகனின் வீட்டைத் தேடி மணமகள் 80கிமீ நடந்தே சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.உபியின் கான்பூர் பகுதியைச் சேர்ந்த மணமகள் கோல்டிக்கும், கன்னாஜ் பகுதியைச் சேர்ந்த விரேந்திர குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மே 4ம் தேதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இவர்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக காத்திருந்து பொறுமை இழந்த மணமகள், மணமகனின் வீட்டைத் தேடி நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 80 கிமீ பயணம் செய்த மணமகள், விரேந்திர குமாரின் வீட்டை அடைந்துள்ளார். திடீரென வீட்டு வாசலில் மணமகள் நிற்பதை பார்த்த மணமகனின் வீட்டார் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மணமகள் வீட்டுக்கும் உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்த பெண்ணிடம் சிறிது காலம் காத்திருக்கும் படி மணமகன் வீட்டார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் உடனடியாக திருமணத்திற்கான நாளை இருவீட்டாரும் குறித்துள்ளனர்.