நமது நாட்டில் திருநங்கைகள் மீதான கண்ணோட்டம் இன்னும் பெரிய அளவில் மாறவே இல்லை. அரசாங்கம் அவர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தாலும் மக்கள் அவர்களை இன்னும் ஏதோ ஒரு கேலி பொருளாக தான் பார்க்கிறார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக பெரும்பாலும் உறவுகளை விட்டு தனியாக தான் வாழ்கிறார்கள். என்ன தான் அவர்கள் படித்து சமூகத்தில் முன்னேறி வந்தாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தை இன்னும் இந்த சமூகம் முழுமையாக அவர்களுக்கு அளிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் புறக்கணிக்கப்பட்டும் கேலிக்கும் ஆளாகி வருகிறார்கள். இதற்கு மேலும் ஒரு உதாரணமாக கொல்கத்தாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஹிரன்மாய் தேய். இவர் ஆங்கிலம் மற்றும் புவியியலில் முதுகலை பட்டமும் மற்றும் ஆசிரியர் கல்வியும் முடிந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கொல்கத்தாவில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் - மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை கொண்டு திருநங்கையாக மாறியுள்ளார். இதன்பின்னர் தனது பெயரை சுசித்ரா தேவி என மாற்றிக்கொண்டார். இதனையடுத்து இவரது வாழ்வில் பல்வேறு கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளது. நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது அங்குள்ள தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தன் மனம் புண்படும் படியாக நடந்துக்கொண்டதாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுசித்ரா தேவி, “கொல்கத்தாவில் உள்ள பள்ளியில் நேர்முகத்தேர்வுக்கு சென்ற போது அங்கிருந்த தலைமை ஆசிரியர் நீங்கள் ஏன் ஆண்கள் அணியும் உடைகளை அணியக்கூடாது எனக் கேட்டார். எனது சான்றிதழ் என்னை ஆண் எனக் கூறுவதால் இவ்வாறான கேள்விகள் வருகிறது. பல இடங்களில் மிகவும் கேவலமாக அணுகுமுறையே இருந்தது. மேலும் சில இடங்களில் உங்களுடைய மார்பகங்கள் உண்மையானதா உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் எல்லாம் வருகிறது. நான் ஒரு திருநங்கையான இல்லாமல் இருந்தால் இதுபோன்ற கேள்வி கேட்பார்களா? எனக் தனது வேதனை தெரிவித்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் முன்பு பணியாற்றிய அதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து பேசியவர், அங்குள்ள ஊழியர்கள் தனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். தான் இந்தப்பள்ளியில் இணைந்ததில் பள்ளி நிர்வாகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இப்போது ஒரு பெண்ணாக எனது வாழ்க்கையை தொடருகிறேன். தற்போது இங்கு 5 முதல் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறேன் என்றார்.