
இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனமான Breastfeeding Promotion Network of India (BPNI) என்ற அமைப்பு, உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைளுக்கான பால் பொருட்களை விற்பனை செய்யும் 15 நிறுவனங்கள், குழந்தைகளுக்கான உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது” என குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த தயாரிப்புகளில் சில பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத் கபூர் போன்ற பிரபலங்களின் விளம்பரங்கள். அந்த விளம்பரங்கள்யாவும், மிகைப்படுத்தி சட்டத்தை மீறி செய்யப்பட்டுள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருக்கும் தாய்மார்களை கொண்டும் குழந்தைளுக்கான பால் பொருட்கள் விளம்பரம் செய்யப்படுவதால், மக்கள் அவற்றை வாங்க தூண்டப்படுகின்றனர். இதுமூலம் பிரபலங்கள் தெரிந்தோ தெரியாமலோ சட்டத்தை மீறுபவர்களாக, தண்டிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இத்தகைய மீறல்களைக் கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் எந்த அமைப்பும் இல்லை. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்த கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பிரபலங்கள் சமூகத்தில் பெரும் பொது செல்வாக்கைக் கொண்டிருப்பதால், இதுபோன்ற விளம்பரங்கள் தாய்மார்களை பாதிக்கின்றன” என்று பிபிஎன்ஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிபிஎன்ஐ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அருண் குப்தா கூறுகையில், “விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களிடம் அரசு விசாரணை நடத்த வேண்டும். மற்றும் தேவைப்பட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.