ஒட்டகங்கள் மூலம் மது கடத்தல்.. டெல்லி போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
டெல்லி மற்றும் அரியானா மாநில எல்லைப் பகுதிகளில் நூதன முறையில் ஒட்டகங்களைப் பயன்படுத்தி மது கடத்திய வினோத் பதானா என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த 2 ஒட்டகங்கள் மற்றும் அவற்றில் ஏற்றி வரப்பட்ட 37 பெட்டி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட வினோத் பதானா, அரியானாவிலிருந்து டெல்லிக்கு மதுபானங்களைக் கடத்தி வந்துள்ளார்.
காவல்துறையின் வாகன சோதனையில் சிக்காமல் இருக்க, பிரதான சாலைகளைத் தவிர்த்து பரிதாபாத் வனப்பகுதி வழியாக ஒட்டகங்கள் மூலம் மதுவை ஏற்றி வந்துள்ளார். பொதுவாக வாகனங்களில் மது கடத்தப்படுவது வழக்கம். ஆனால், வனப்பகுதிகளில் எளிதாகச் செல்லக்கூடிய ஒட்டகங்களை இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
பிடிபட்ட 2 ஒட்டகங்களின் மீது கட்டப்பட்டிருந்த 37 பெட்டி சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கு முன்பும் இதே போன்ற வனப்பாதை வழியாக ஒட்டகங்களைப் பயன்படுத்தி மது கடத்தப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளது. வனப்பகுதிகள் வழியாக கடத்தல் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட ஒட்டகங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

