மராத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு செல்லும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதத்திற்கு மேல் மராத்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்து மத்திய மாநில அரசுகள் அளித்து வரும் கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு மற்றும் இதர மானிய சலுகைகள் கிடைக்குமாறு செய்யவேண்டும் எனக் கோரி பலமுறை, பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தியுள்ளனர்.
அதனையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட எம்.ஜி.கெய்க்வாட் தலைமையில் ஆணையம், மராத்தியர்கள் கல்வி மற்றும் சமூக ரீதியில் பின் தங்கிய சமூகம் என்று அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் அடிப்படையில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்கரே அமர்வு இன்று தீர்ப்பளித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு ஆணையத்தின் அறிக்கையின்படி செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இருப்பினும், ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி, இடஒதுக்கீடு 16-இல் இருந்து 12-13 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.