இந்திய வான்வழி பரப்பில் சென்ற ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நடந்தது என்ன?

இந்திய வான்வழி பரப்பில் சென்ற ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நடந்தது என்ன?
இந்திய வான்வழி பரப்பில் சென்ற ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நடந்தது என்ன?

இந்திய வான் வழி பரப்பில் ஈரான் நாட்டில் இருந்து பயணித்த விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து இந்திய விமானப்படை விளக்கமளித்துள்ளது.

ஈரானின் தெஹ்ரானில் இருந்து சீனாவில் உள்ள குவாங்சூ வரை சென்ற ஈரான் நாட்டின் தனியார் நிறுவன விமானம், இந்திய வான் வழி பரப்பில் பயணித்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக விமானி டெல்லி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கூறியுள்ளார். ஆனால் டெல்லி வான்வெளி டிராபிக் கண்ட்ரோல் டெல்லியில் தரையரங்க அனுமதி மறுத்ததுடன், ஜெய்ப்பூர் உள்ளிட்ட வேறு சில விமான நிலையங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் இந்த பரிந்துரைகளை விமானி ஏற்க மறுத்து தொடர்ந்து இந்திய வான்வெளி பகுதியை விட்டு வெளியேறியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தை ஈரான் நாட்டின் விமான நிறுவனத்தின் விமானி தொடர்பு கொண்ட உடனேயே இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானங்கள் உஷார் படுத்தப்பட்டு, முழுமையான கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டது. தனியார் நிறுவன விமானத்தை தொடர்ந்து வான்வெளியில் பயணித்தபடி பின்தொடர்ந்தும் சென்றுள்ளது இந்திய விமானப்படை போர் விமானங்கள்.

ஏற்கனவே இந்தியா-சீனா இடையிலான பதற்ற நிலை இருந்து வரும் நிலையில் இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முழு விளக்கத்தையும் அளித்துள்ளது இந்திய விமானப்படை.

சம்பவம் குறித்து விளக்கமளித்திருக்கும் இந்திய விமானப்படை, ஈரான் நாட்டின் பதிவு செய்யப்பட்ட விமானம் இந்திய வான்வழிப் பகுதியில் நுழைந்த பொழுது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் பாதுகாப்பான தொலைவில் அந்த விமானத்தை பின் தொடர்ந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில விமான நிலையங்களில் தரையிறங்க பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால் அவற்றை ஏற்க மறுத்த விமானி தொடர்ந்து விமானத்தை தனது பயண பாதையிலேயே செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்திற்கு பிறகு தேஹ்ரானிலிருந்து இந்த வெடிகுண்டு மிரட்டலை புறக்கணிக்குமாறு தகவல் கிடைத்த நிலையில், மேற்கூறிய விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்திய வான்வழிப் பகுதியில் சம்பந்தப்பட்ட விமானம் பயணம் மேற்கொண்ட பொழுது கடைசிவரை முழுமையாக கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாகவும், இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com