காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா பெண் எம்பி மீனாட்சி லேக்கி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாளிதழில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை திருடன் என நீதிபதியே கூறி விட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஃபேல் குறித்த உத்தரவில் மோடியை பற்றி நீதிபதி எதுவுமே கூறாத நிலையில், அவர் பேச்சை ராகுல் திரித்துக் கூறியுள்ளார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா சார்பில் எம்பி மீனாட்சி லேக்கி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ராகுல் காந்தி மீது தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை வரும் 15ம் தேதி விசாரிப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.