மேற்கு வங்கம் | முதல்வர் மம்தாவை எதிர்க்கும் மாஜி உதவியாளர்.. முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக!
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான போட்டியில் உள்ளன. இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூர் மற்றும் நந்திகிராமில் சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கம், இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில், வரும் தேர்தல் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான போட்டியில் உள்ளன. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 144 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் சுவேந்து அதிகாரி மற்றும் திலீப் கோஷ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூர் மற்றும் நந்திகிராமில் சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில், சுவேந்து அதிகாரி நந்திகிராமில் போட்டியிட்டு மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி பபானிபூர் ஆகும். இந்தத் தொகுதியில் சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியுள்ளது. இது அதிகாரிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே ஒரு மோதலுக்கு களம் அமைக்கிறது. பாஜகவுக்கு மாறுவதற்கு முன்பு மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர ராஷ்பெஹாரி தொகுதியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அக்னிமித்ரா பால் அசன்சோல் தெற்கில் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் 10 பெண் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

