ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் திரையுலக பிரபலங்கள் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்.
இதுதவிர சமூக ரீதியிலான வாக்குகளை பெறுவதற்காக ஜாட் இன தலைவர்களையும் பாஜக மேலிடம் பரப்புரையில் களமிறக்கியுள்ளது. போஜ்புரி பேசும் மக்களின் வாக்குகளை கவருவதற்காக நகர்ப்புறங்களில் போஜ்புரி நடிகர்களும், எம்.பி.க்களுமான ரவி கிஷண், மனோஜ் திவாரி ஆகியோரும் களமிறக்கப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு பலவீனமாக உள்ள தொகுதிகளில் பாலிவுட் நடிகர்கள் ஹேமமாலினி, சன்னி தியோல், பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் ஆகியோரையும் பரப்புரைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.