பிஹார் சட்டமன்ற தேர்தல்| ’160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்..’ - பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. பரப்பராக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 71.6 சதவீதம் பெண்களும், 62.8 சதவீத ஆண்களும் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவிவரும் நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்தசூழலில் யார் மெஜாரிட்டியை நிரூபிக்க போகிறார்கள், ஆட்சியை பிடிக்கப்போகிறது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது..
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறது.
தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 191 இடங்களிலும், மகாகத்பந்தன் கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன.
ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. இந்தசூழலில் NDA கூட்டணி 160-170 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் துஹின் ஏ. சின்ஹா கூறியுள்ளார்..
தேர்தல் முடிவுகள் குறித்து பேசியிருக்கும் அவர், "இது எங்களது எதிர்பார்ப்பின்படி தான் செல்கிறது. ஜங்கிள் ராஜுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மகளிர் மற்றும் இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். பீஹாரை நேபாள், வங்கதேசம் போல மாற்ற RJD முயற்சிப்பது மோசமானது. நாங்கள் 160–170 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்” என பேசியுள்ளார்..

