பாஜகவில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு மாறிய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக மேற்கு வங்க பாஜக எம்.பி சவுமித்ர கான் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிஷன்பூர் மக்களவை எம்.பி. சவுமித்ர கான், கடந்த ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக சவுமித்ர கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார். சுஜாதா கான் பாஜக உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்றவர் ஆவார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுஜாதா மோண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகி உள்ளார்.
இதுகுறித்து சுஜாதா மோண்டல் கான் கூறுகையில், "நான் சுவாசிக்க விரும்புகிறேன். எனக்கு மரியாதை வேண்டும். நான் ஒரு திறமையான கட்சியின் தலைவராக இருக்க விரும்புகிறேன். எனது அன்பான தீதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். பாஜகவில் புதிதாக சேர்க்கப்பட்ட, தவறான மற்றும் ஊழல் தலைவர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனது கணவர் ஒரு நாள் உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன். அவர் ஒருநாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார் என நம்புகிறேன்" என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக கட்சி மாறியதாக சுஜாதா மோண்டல் கானை அவரின் கணவர் எம்.பி. சவுமித்ர கான் விவாகரத்து செய்ய இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சவுமித்ர கான், ``எங்களின் ரிலேஷன்ஷிப் ஓவர். அரசியல் எங்களது 10 ஆண்டு கால திருமண பந்தத்தை முறித்துவிட்டது.
பாஜகவுக்கு நான் கடுமையாக உழைப்பேன். நான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன்" என்று கண்ணீருடன் பேசினார்.
ஆனால், இதற்கு பதில் கொடுத்து பேசிய சுஜாதா, ``அரசியல் வேறு குடும்பம் வேறு. இதை புரிந்துகொள்ள வேண்டும். என் கணவர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை செய்யட்டும்." என்று மட்டும் கூறியுள்ளார். அரசியல், காரணமாக ஒரு குடும்பம் பிரிந்துள்ளது மேற்குவங்க அரசியலில் புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.