போதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது
போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக, பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநிலங்களவை எம்.பி, ரூபா கங்குலி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் மகன் ஆகாஷ் முகர்ஜி. இவர் நேற்று இரவு கொல்கத்தா கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அவர் மதுபோதையில் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறிய கார், கோல்ப் கிளப்பின் சுவரில் பலமாக மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்தது. ஆகாஷூக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மது போதையில் வந்தாரா என்பது பற்றி மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
பிரபல பாடகி மற்றும் வங்காள நடிகையான ரூபா கங்குலி, 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஹவ்ரா வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து அவர் பாஜக சார்பில், மாநிலங்களைக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.