சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், கர்னூல் மாவட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி ஐதராபாத் அருகே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
52 வயதான நீரஜா ரெட்டி, தெலங்கானாவின் ஐதராபாத்திலிருந்து கர்னூலுக்கு நேற்று (ஏப்., 16) காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பீச்சுப்பள்ளி என்ற பகுதி வழியாக சென்ற போது டயர் வெடித்ததால் காரின் கட்டுப்பாடு செயல்படாமல் போயிருக்கிறது. இதனால் கார் சாலையோரம் அடித்துச் செல்லப்பட்டதால் பலத்த காயமடைந்த நீரஜா ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் காரை ஓட்டி வந்த டிரைவர் அபயா கட்டத்தை தாண்டிவிட்டார் என கொண்டாண்டபுரம் போலீசார் தகவலளித்திருக்கிறார்கள்.
அரசியலில் நீரஜா ரெட்டி கடந்து வந்த பாதை!
அலூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த இந்த நீரஜா ரெட்டி, 2019ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நீரஜா, கர்னூலின் அலூர் பகுதியின் பொறுப்பாளராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் அக்கட்சியில் பதவி வகித்து வந்தார்.
நீரஜாவின் கணவரும் பதிகொண்டா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதும், அவர் கடந்த 1996ம் ஆண்டு கலவரத்தின் போது கொல்லப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நீரஜா ரெட்டி உயிரிழந்ததை அறிந்த அரசியல் கட்சியினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.