AI மாநாடு | உரையை தவிர்த்த பில்கேட்ஸ்.. எஃப்ஸ்டீன் கோப்புகள் எதிரொலியா?
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த 16-ஆம் தேதி தொடங்கி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில், 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்த இருந்தார். ஆனால், இந்த மாநாட்டில் அவர் திடீரென உரையாற்ற மாட்டார் என்று கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கேட்ஸ் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பாக கேட்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஏஐ உச்சி மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதற்காக பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார். மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு இலக்குகளை முன்னேற்றுவதற்கான எங்கள் பணிகளை மேற்கொள்ள கேட்ஸ் அறக்கட்டளை முழுமையாக உறுதிபூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதியாக ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அலுவலகங்களின் தலைவர் அங்கூர் வோரா கலந்து கொள்வார், அவர் புது டெல்லியில் நடைபெறும் உச்சிமாநாட்டில் இன்று மாலை உரையாற்றுவார் என்று கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும் அரசாங்கம் AI விவாதங்களில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், வேறு எதன் மீதும் கவனம் செலுத்தப்படுவதை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான பில் கேட்ஸின் நெருக்கம் குறித்த தகவல்கள் எஃப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் பில் கேட்ஸின் பெயர்
கடந்த மாதம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளின் தொகுப்பில் பில் கேட்சின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆவணங்களில் இருந்த மின்னஞ்சலில், 2019ஆம் ஆண்டு அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துகொண்ட பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், பில் கேட்ஸ் திருமணத்திற்குப் புறம்பான பல விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும் கேட்ஸுடனான தனது உறவு ரஷ்யப் பெண்களுடனான பாலியல் உறவின் விளைவுகளைச் சமாளிக்க பில் கேட்ஸுக்கு மருந்துகளைப் பெற்றுத் தருவது முதல், திருமணமான பெண்களுடன் அவர் சட்டவிரோதமாகச் சந்திப்புகளை நடத்துவதற்கு வசதி செய்து கொடுப்பதுவரை இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
"நான் எஃப்ஸ்டீனுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும், நான் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் இந்த மாதம் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். மேலும், ’’இதுபோன்ற மின்னஞ்சல் ஒருபோதும் எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த மின்னஞ்சல் பொய்யானது. அவர் ஏதேனும் ஒரு வகையில் என்னை தாக்க முயற்சித்தாரா எனத் தெரியவில்லை என்றும் நான் 2011-இல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அவருடன் பலமுறை இரவு விருந்துகளில் கலந்துகொண்டேன். ஆனால் அவரது கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. சுகாதாரத்திற்கு நிதியைப் பெற தூண்ட முடியும் என்று நினைத்தே அவருடன் பேசினேன். ஆனால், அது ஒரு பயனற்ற முயற்சி என்பது பின்புதான் தெரிந்தது’’ என்றும் கூறியிருந்தார் பில் கேட்ஸ்.

