உறவினருக்கு கல்யாணம்.. 10 நாட்கள் பரோலில் வரும் பில்கிஸ் பானு குற்றவாளி!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளில் ஒருவருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானுட்விட்டர்

குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கலவரத்தில் அவரது உறவினர்களும் கொலை செய்யப்பட்டனர். பின்னர் நல்வாய்ப்பாக பில்கிஸ் பானு உயிர்பிழைத்த நிலையில், அவர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் பேரில், 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 10-15 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நன்னடத்தையின் அடிப்படையில் குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம்
பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம்file

இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பினர் இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ’தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை’ என தெரிவித்ததுடன், முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளில் 5 பேர் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அதையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.

இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் சந்தனாவின் உறவினர் திருமணத்தில் பங்கேற்க 10 நாள்கள் பரோல் வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரமேஷ் பாய் சந்தனா, மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வசதியாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் 10 நாட்கள் பரோல் கேட்டு கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இன்று அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார். பிரதீப் மோதியா என்ற குற்றவாளி, கடந்த பிப். 7 முதல் பிப். 11 வரை பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com