மலையிலிருந்து வீணாகிப்போகும் மழைத்தண்ணீரை தன் கிராம வயல்களுக்கு கொண்டுவர 30 வருடங்கள் முயற்சிசெய்து 3 கிமீ தூரத்திற்கு கால்வாயை வெட்டியுள்ளார் பீஹாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.
பீஹார் மாநிலம், காயா மாவட்டத்தில் உள்ள லஹ்துவா பகுதியில் உள்ளது கொத்திவாலா கிராமம். காயா மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 80 கிமீ தூரத்தில் அடர்ந்த காடுகளும், மலைகளும் சூழ்ந்த இக்கிராமத்தைச் சேர்ந்தவர் லாயுங்கி புய்யான். இவர் கடந்த 30 வருடங்களாக தனது கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது. அதனால் அவர் மலையிலிருந்து தனது ஊர் குளத்தை இணைக்கும் ஒரு கால்வாயை வெட்டும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. மேலும் கிராமத்திலிருந்து பலர் வேலைவாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை.
விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்புதான் இந்த கிராமத்தின் முக்கிய தொழிலாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் மலையிலிருந்து வழிந்தோடும் நீர் வீணாக ஆற்றில் கலப்பதை புய்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இவர் தனி ஆளாக முயற்சி எடுத்து 30 வருடங்கள் இந்த கால்வாயை வெட்டியுள்ளார். இது அங்குள்ள கால்நடைகளுக்கும், வயலுக்கும் பெரும் உதவியாக இருக்கும். அவர் தனக்காக மட்டுமல்லாமல் அந்த பகுதிக்கே உதவி செய்துள்ளார் என அங்குள்ள கிராம வாசிகள் பாராட்டி வருகின்றனர்.