பீகார் தேர்தலில் படுதோல்வி.. அரசியலிலிருந்து விலகிய லாலு பிரசாத் மகள்!
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று (நவ.14) நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து பெரும்பான்மை பெற்றுள்ளன. ஆனால், மகாகத்பந்தன் கூட்டணி 31 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதவில், “நான் அரசியலைவிட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையே துறக்கிறேன். சஞ்சய் யாதவும் ரமீஸும் என்னிடம் கேட்டது இதுதான், நான் எல்லாப் பழிகளையும் ஏற்றுக்கொள்கிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார். சஞ்சய் யாதவ் மற்றும் அவரது கணவர் ரமீஸ் ஆலம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி தம்பதியருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். அதில் நான்கு பேர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, லாலுவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப் யாதவ், கடந்த மே மாதம் 25ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, அவர் பீகார் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்ட நிலையில், அவரும் தோல்வியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

