பீகார் | ஆட்சியை விமர்சித்த தேஜஸ்வி.. பதிலடி கொடுத்த நிதிஷ் குமார்! சட்டசபையில் அனல்பறந்த பேச்சு
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகாரில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தின்போது முதல்வர் நிதிஷ் குமாருக்கும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
2005 வரை இருந்த லாலு பிரசாத் ஆட்சியோடு தற்போதைய ஆட்சியை ஒப்பிட்ட தேஜஸ்வி, ”இந்த அரசாங்கம் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், 2005க்கு முந்தைய காலத்தையே குறை கூறிக்கொண்டே இருக்கும்” என கடுமையாக விமர்சித்தார்.
இதனை இடைமறித்துப் பேசிய நிதிஷ் குமார், ”முன்பு பீகாரில் என்ன இருந்தது? உன் (தேஜஸ்வி யாதவ்) தந்தை உருவாவதற்கு நான்தான் காரணம். உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள்கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள், ஆனாலும் நான் அவரை ஆதரித்தேன். பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிக்கப்படுவதை லாலு யாதவ் எதிர்த்தபோது, அது தவறு என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் நான் அவரை எதிர்த்தேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தார். கூட்டணி முறிந்ததில் இருந்து தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ”நிதிஷ் குமாரின் கடந்தகால தவறுகளை மன்னித்து அவர் எங்கள் கூட்டணியில் இணையும் நேரம் வந்துவிட்டது, அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன” என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை நிதிஷ் குமார் நிராகரித்தார்.