மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா.
மணிப்பூரின் இரும்பு பெண்மணி எனப்படும் இவர், தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு சில மாதங்களுக்கு முன்பு, அரசியல் கட்சியைத் துவக்கினார். அவரது மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற கட்சி, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. மணிப்பூர் முதலமைச்சர் இபிபோ சிங்கை எதிர்த்து தோபால் தொகுதியில் இரோம் ஷர்மிளா போட்டியிட்டார்.
இந்நிலையில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று இரோம் ஷர்மிளா படுதோல்வி அடைந்துள்ளார். மக்களுக்காக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த ஒரு போராளியை அம்மாநில மக்கள் ஓரம் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர், ‘தேர்தல் தோல்வி என்னைப் பாதிக்கவில்லை. அது மக்களின் மனநிலையை பொறுத்தது. அடுத்த தேர்தலிலும் முயற்சிப்பேன்’ என அசராமல் கூறியுள்ளார்.
இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 143 வாக்குகள் விழுந்துள்ளன. நோட்டாவிற்கு விழுந்ததை விட 53 வாக்குகள் குறைவாகவே ஐரோம் ஷர்மிளாவி்ற்கு வாக்குகள் கிடைத்துள்ளன.