“எங்களுக்கே இந்த இடம் தானா..?” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி

“எங்களுக்கே இந்த இடம் தானா..?” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி
“எங்களுக்கே இந்த இடம் தானா..?” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி

வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் பெங்களூரு நகரத்திற்கு கிடைத்த இடத்தை பார்த்து அந்நகர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்டது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களை தேசியளவில் ஆய்வு நடத்தியுள்ளது. நகர்ப்புற போக்குவரத்து, கழிவுநீர் மேலாண்மை, மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் தரநிலைகளை நிர்ணயித்து 78 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் 5 லட்சத்துக்குள் மக்கள் வசிக்கும் நகரங்கள் என மக்கள் தொகை அடிப்படையிலும் காரணிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப மதிப்பெண் அளித்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களாக நடந்த ஆய்வில் தரவரிசையை தயாரித்து மத்திய நகர்புற வளர்ச்சித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. 

                                                                                                                                                                                                                                       (Courtesy - bangalore mirror)

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தத் தரவரிசையில் பெங்களூருக்கு 58 இடமே கிடைத்துள்ளது. இந்தியாவில் மிகவும் வளர்ந்த நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணியில் திகழும் தனது பெருமை மிகு நிலையின் காரணமாக, பெங்களூரு இந்தியாவின் ‘சிலிகான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இத்தனையை சிறப்பு வாய்ந்த பெங்களூரு நகருக்கு 58வது இடம் கிடைத்துள்ளது பெங்களூரு நகரவாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நகர்புற ஆய்வாளர் ஆர்.கே.மிஸ்ரா பெங்களூரு மிரரிடம் பேசுகையில், “வாழத் தகுதியான நகரம் என்பதை அளவிட பல்வேறு காரணிகள் உள்ளன. பெங்களூரு மக்கள்தொகைக்கு ஏற்ப டாய்லெட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். போக்குவரத்து என்பது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. ஆனால், மெட்ரோ பணிகள் முடிவடைந்த உடன், பாதி போக்குவரத்து சிக்கல்கள் தீர்ந்துவிடும். நகர உள்கட்டமைப்பை பார்த்தால் அது மேம்பட்டுள்ளது. நகரில் பாதசாரிகளின் நடவடிக்கையும் மேன்மை அடைந்துள்ளது. ஒரு பெங்களூரு நகரவாசியாக மற்ற நகரங்களில் வசிப்பதை நான் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்றார். 

சமூக ஆர்வலர் ஸ்ரீனிவாசா ஆலவில்லி என்பவர் பேசுகையில், “ஒரு பெங்களூரு நகரவாசியாக தரவரிசை பட்டியலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த அளவீடுகள் எனக்கு திருப்தியாக இல்லை. காற்று, நீர் தரம், நிலத்தடி வடிகால், பொது போக்குவரத்து, நிர்வாகத்தில் குடிமக்களின் பங்களிப்பு ஆகிய அளவீடுகளை வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்” என்றார். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலை கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் பெங்களூர் நகரம் மேம்பாடு அடைய தேவையானவற்றை பற்றி யோசிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தத் தரவரிசை பட்டியலில், மகாராஷ்ட்ராவில் உள்ள புனே, நவி மும்பை, மற்றும் கிரேட்டர் மும்பை ஆகிய மூன்று நகரங்களும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டன. திருப்பதி, சண்டிகர், தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். இந்திய முக்கிய மெட்ரோ நகரங்களாக சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் முன்னிலையில் இடம்பெறவில்லை. காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகர் 100வது இடத்தில் உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி(12), சென்னை(14), கோவை(25), ஈரோடு(26), மதுரை (28), திருப்பூர்(29), திருநெல்வேலி(37), திண்டுக்கல்(40), சேலம்(42), தஞ்சாவூர்(43) இடங்களை பிடித்துள்ளன. இப்பட்டியலில் கொல்கத்தாவிற்கு இடம் இல்லை என்பது முக்கியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com