மேற்கு வங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு - மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்கத்தில் ரயிலில் ஏறச்சென்ற அமைச்சர் ஜாகிர் ஹொசைன் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அவர், கொல்கத்தா செல்வதற்காக நேற்றிரவு முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் குழப்பம் ஏற்பட, அமைச்சருடன் வந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர்.
வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாகிர் ஹொசைன் ஜாங்கிபுர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து நிமிதா ரயில் நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தாக்குதல் குறித்து மேற்கு வங்க காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
வெடிகுண்டு வீச்சுக்கு திரிணாமூல் காங்கிரஸின் அரசியல் எதிரிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான மலே கடாக் குற்றஞ்சாட்டி உள்ளார். இதனிடையே தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகக் கூறியுள்ளார்.