“மேடம், நெருப்புடன் விளையாடாதீர்கள்” - மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் எச்சரிக்கை

“மேடம், நெருப்புடன் விளையாடாதீர்கள்” - மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் எச்சரிக்கை
“மேடம், நெருப்புடன் விளையாடாதீர்கள்” - மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் எச்சரிக்கை

‘மேடம், நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று சென்றார். அப்போது ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டு, கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டன. முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜிதான் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய ஜே.பி.நட்டா, “இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சியளித்தது. இதற்குமுன் எப்போதும் நடந்தில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பின்மையும் இ்ல்லை. மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்” என்று அடுக்கடுக்காக குற்றாம்சாட்டினார்.

இதையடுத்து ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது கற்களை வீசித் தாக்கினார்கள் என பாஜக நாடகமாடுகிறது எனவும், பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதால் திசை திருப்புகிறார்கள் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேலும், “நட்டாவின் பாதுகாப்பு வாகனம் எவ்வாறு தாக்கப்படக்கூடும். நட்டாவுக்குத்தான் மத்திய அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், பிஎஸ்எப் படைகள் பாதுகாப்புக்கு இருக்கின்றன.

மத்திய படைகளை சார்ந்து நட்டா இருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் பலருக்கும் மாநில அரசுக்கே தெரியாமல் மத்திய படை பாதுகாப்பு அளிக்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் என்பது மாநில அரசுக்கு உட்பட்டது. ஆனால், தொடர்ந்து அதில் மத்திய அரசு தலையிடுகிறது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்க்கிறதா? ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தொடர்ந்து மாநில அரசைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், வங்காள ஆளுநர் தங்கர் இன்று காலை மேற்கு வங்கத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், வங்காள ஆளுநர் தங்கர் “நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்காக வெட்கப்படுகிறேன். ஆட்சியில் இது மிகவும் வேதனையான நாள். முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த அறிக்கையை நான் மிகவும் தீவிரமாக கவனிக்கிறேன். அவர் அவருடைய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அரசியல் சித்தாந்தங்களுக்கும் அறிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அதை மீறக்கூடாது. நாம் எங்கு செல்கிறோம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? மேற்கு வங்க முதல்வர், தயவுசெய்து நெருப்புடன் விளையாட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com