மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது.
கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோரும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு ஒரே ஒரு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தவிர அனைவரும் தங்களது ஆதரவினை தெரிவித்தனர். இதனால் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, கேரள உயர் நீதிமன்றம், மத்திய அரசின் கால்நடை விற்பனை தடை அறிவிப்பாணையில் குறுக்கிட முடியாது என்று கூறியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் தடைக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.