தொடரும் பதற்றம் | இந்தியாவைத் தொடர்ந்து விசா சேவைகளை நிறுத்திய வங்கதேசம்!
தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
அண்டை மாநிலமான வங்கதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்த வன்முறை காரணமாக, தற்போதுவரை அந்நாடு பதற்றத்தில் உள்ளது. வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை வெடித்தது. அது, அடங்கிய அடுத்த சில நாட்களிலேயே தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் முக்கிய தலைவரான முகமது மொடலெப் சிக்தர் கொலை செய்யப்பட்டார். இதனால் வங்கதேசம் பதற்றத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தின்போது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லி தவிர, திரிபுராவில் உள்ள அகர்தலா மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள விசா சேவை மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. முன்னதாக, வங்கதேசத்தில் பாதுகாப்பு காரணம் காட்டி சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வங்கதேசத்தில் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தலுக்கு இன்னும் 50 நாட்களே இருப்பதாகவும் அந்நாட்டின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

