கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா : குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்?
கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பதவி விலகியுள்ளதால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான குமாரசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் இதற்கு சம்மதித்தார். இந்த சூழலில் சித்தராமையாவே மீண்டும் முதல்வராக வேண்டும் என ஆதரவாளர்கள் எழுப்பிய குரலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், கர்நாடக அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் ஆரம்பித்து, போட்டியிடுவது வரை இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை நீடித்தது.
இந்நிலையில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயநகர தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வான ஆனந்த் சிங் என்ற எம்எல்ஏ, இன்று ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 78ஆகக் குறைந்துள்ளது. ஆனந்த் சிங் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சந்தூர் தாலுகாவில், எஃகு ஆலை அமைப்பதற்காக 3 ஆயிரத்து 667 ஏக்கர் நிலத்தை JSW நிறுவனத்திற்கு விற்கும் முதலமைச்சர் குமாரசாமியின் முடிவுக்கு ஆனந்த் சிங் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இதில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி வந்தார். மேலும் 2008 -13ல் கர்நாடகாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா ஆட்சியில் ஆனந்த் சிங் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். பாரதிய ஜனதா தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து வரும் ஆனந்த் சிங் அக்கட்சியில் மீண்டும் சேரக்கூடும் என்று கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

