வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு காலவதியான உணவுப் பொருட்கள் வழங்கிய பதஞ்சலி
அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு காலாவதியான உணவுப் பொருட்களை பதஞ்சலி நிறுவனம் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரத்தையே புரட்டி போட்டது. இந்த நிலையில் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வந்த மக்களுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தனர். இந்த நிலையில், சாமியார் பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம், சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான ஜூஸ், பால் பவுடர் போன்ற உணவுப் பொருட்களை அசாம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக வழக்கியுள்ளது.
தற்போது அந்த உணவுப் பொருட்களில் பாதிக்கும் மேல் காலாவதியான பொருட்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. உணவு பொருட்களை வாங்கிய மக்கள் பாக்கிங்கில் குறிப்பிட்டுள்ள உபயோகப்படுத்த கடைசி தேதியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் பெரும்பாலான உணவுப் பொருட்களில் கடைசியாக அக்டோபர் 2016 என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பதஞ்சலி நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திஜரிவாலா கூறுகையில், “நாங்கள் காலாவதியான பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்பவில்லை. பதஞ்சலி நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்துள்ளது. இதில் பொருட்களை எடுத்து கொண்டுபோய் வழங்குவதில் மற்றவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை” என்றார்.