
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதை அடுத்து, சமூகவலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் தீர்ப்பு வழங்கவுள்ளனர். நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் நகரில் மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்படுகிறது. நாளை மாலை வரை இந்த ரத்து தொடரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.