“இலங்கை செல்வதை கூடுமானவரை தவிருங்கள்” - இந்திய அரசு வேண்டுகோள்
அவசர தேவையில்லையெனில் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருவிழாவின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், சில குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்முனை அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் அதிரடி படையினருக்கும் நேற்றிரவு சண்டை ஏற்பட்டது. மோதலின் போது பாதுகாப்பு படையினரிடம் சிக்காமலிருக்க, வீட்டிலிருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். அதனால், இலங்கையில் தொடர்ச்சியாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு அவசர தேவைகள் இருந்தால் மட்டும் செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில் அங்கு செல்வதை தவிர்த்துவிடுமாறும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
‘இலங்கை சென்றுள்ள இந்தியர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவையெனில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், கண்டியில் உள்ள உதவி தூதரகம், ஹம்பண்டோடா மற்றும் ஜஃப்னாவில் உள்ள அலுவலகங்களையும் உதவிக்கு அணுகலாம்’ என்றும் தெரிவித்துள்ளது.