மனைவியின்  திதியை தவிர்த்துவிட்டு ஏழைகளுக்கு உணவளித்த முதியவர் 

மனைவியின்  திதியை தவிர்த்துவிட்டு ஏழைகளுக்கு உணவளித்த முதியவர் 
மனைவியின்  திதியை தவிர்த்துவிட்டு ஏழைகளுக்கு உணவளித்த  முதியவர் 
மனைவிக்கு கொடுக்க வேண்டிய திதியைத் தவிர்த்துவிட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு முதியவர் ஒருவர் உணவளித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 
 
இந்த ஊரடங்கு காலத்தில் உலக பணக்காரர்கள்தான் உதவ வேண்டும் என்பதில்லை. தன்னால் இயன்ற உதவியைத் தானமாக வழங்குவதே பெரிய சேவை. அப்படி ஒரு சேவையை அசாமில் உள்ளவர் செய்துள்ளார்.  அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோலாப் கோகோய்.  52 வயதான இவர் இந்த மாவட்டத்தில் உள்ள பெலோகுரி கிராமத்தில் வசித்து வருகிறார். ஓட்டுநர் தொழில்  செய்து வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்டார். ஆகவே இவர் தங்கள் மூதாதையர் கடைபிடித்து வந்த சடங்கு படி தனது மனைவிக்கு வருடா வருடம் ஷ்ரத்தா செய்து வருகிறார்.  ஷ்ரத்தா என்பது இறந்த மூதாதையர் அல்லது உறவினரின் நினைவாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. 
 
(கோப்பு புகைப்படம்)
 
இந்நிலையில் கோலாப் கோகோய், தனது மனைவியின் சடங்கைச் செய்யவில்லை. இந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆகவே கோலாப் அனைத்து மதச் சடங்குகளையும் ரத்து செய்துவிட்டு 32 ஏழைக் குடும்பங்களுக்கு உணவு வழங்கி உதவியுள்ளார். 
 
 
இது குறித்து ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிக்குப் பேசிய கோலாப், ஏழைகளுக்கு உதவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும்,  தனது மனைவிக்குச் செலுத்தக்கூடிய சிறந்த அஞ்சலி இதுவே  என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், "எனது கிராமத்தில் உள்ள முதியோருடன் கலந்து ஆலோசித்த பின்னர், ஏழைகளுக்கு  உணவுப் பொருட்களை விநியோகித்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன்" என்றும் கூறியுள்ளார்.
 
(கோப்பு புகைப்படம்)
 
இதுவரை அசாமில்  32  கொரோனா நோயாளிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே ஹைலாகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளி ஏப்ரல் 10 அன்று இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com