எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார்: திருமணமான பெண் நீதி கேட்டு கண்ணீர்..!
அசாம் மாநில எம்எல்ஏ தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தெற்கு அசாம் பகுதியில் உள்ள அல்காபூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நிஜாம் உதின் சவுத்திரி. 45 வயதான இவர் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் எம்எல்ஏ சவுத்ரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக மணமான பெண் ஒருவர் ஹைலகாண்டி சதார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அந்த காவல்நிலையத்தின் போலீசார் கூறும்போது, “ மணமான பெண் ஒருவர் எம்எல்ஏ நிஜாம் உதின் சவுத்ரி மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, வழக்கை திரும்பப் பெற எம்எல்ஏ தனக்கு 5 லட்சம் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தனது கணவரும் உடந்தையாக செயல்பட்டதாக புகாரில் அப்பெண் கூறியுள்ளார். தனது வீட்டில் வைத்து எம்எல்ஏ இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு முறை சுற்றுலா வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேசமயம் சுற்றுலா வீட்டிற்கு தனது கணவர்தான் தன்னை அழைத்துச் சென்றதாகவும் அப்பெண் புகாரில் கூறியுள்ளார். அதன்பின் கணவர் தன்னை வீட்டில் வைத்து பூட்டியதாகவும், ஆனால் எப்படியோ சமாளித்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அப்பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் அப்பெண் பேசும்போது, “எனக்கு நீதி வேண்டும். நீதி எனக்கு மறுக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என கண்ணீருடன் தெரிவித்தார். இருந்தபோதும் எம்எல்ஏ சவுத்ரி இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ கூறும்போது, “ எனது குழந்தைகளை அப்பெண்ணின் கணவர்தான் டியூசனுக்கு அழைத்துச் செல்வார். அதன்மூலம் தான் அவரை எனக்குத் தெரியும். கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர்தான் இவர்களுக்கு திருமணம் ஆனது. ஆனால் அப்போது இருந்தே சண்டைதான். அதனால் அப்பெண்ணின் கணவர் என் வீட்டிலும் சில நாட்கள் தங்கினார். தற்போது தன் கணவரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக அப்பெண் என் மீது வீண் பழி போடுகிறார். இது ஒரு அரசியல் சதி. பொது வெளியில் என் பெயரை களங்கப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி. ஒரு நல்ல மனிதன் தன் மனைவியை இவ்வாறு செய்ய நிர்பந்திப்பாரா..? அவர் வீட்டில் மூன்று நான்கு சகோதரர்கள் இருக்கின்றனர். அப்படியிருக்க நான் எப்படி அவர் வீட்டில் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்க முடியும். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்” என்றார்.