"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்

"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்

அசாமில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதால் 26 மாவட்டங்களில் 1,089க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள கச்சாரில் இருவர் மற்றும் உடல்குரி பகுதியில் ஒருவர் வெள்ளத்தால் உயிரிழந்த நிலையில், டிமா ஹசாவோவில் நான்கு பேரும், லக்கிம்பூரில் ஒருவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கச்சாரில் நான்கு பேர் மற்றும் நாகோன் மாவட்டத்தில் ஒருவர் உட்பட ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும், நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன .



வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள 26 மாவட்ட நிர்வாகங்களால் 142 நிவாரண முகாம்கள் மற்றும் 115 நிவாரண விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்த மையங்களில் மொத்தம் 39,558 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தஞ்சமடைந்துள்ளனர்.

கன மழையை தொடர்ந்து தற்போது, கம்பூர் மற்றும் தரம்துல் ஆகிய இடங்களில் கோபிலி நதியும், நங்லாமுரகாட்டில் திசாங் நதியும், ஆந்திர காட் பகுதியில் பராக் நதியும், கரீம்கஞ்சில் குஷியாரா நதியும் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.



இந்த சூழலில், கவுகாத்தி வானிலை மையம் வரும் நாட்களில் இப்பகுதியில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது. மேலும், அசாம் மாநிலத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com