மாடலை கொன்று சூட்கேஸுக்குள் அடைத்தது ஏன்? மாணவர் வாக்குமூலம்!
மாடலை கொன்றது ஏன் என்பது பற்றி கைது செய்யப்பட்ட மாணவன் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்ஷித். வயது 20. மாடல் ஆகும் ஆசையில் இருந்தவர் அதற்காக மும்பை வந்துள்ளார். இவருக்கு மும்பையில் பி.காம் படித்துக்கொண்டிருக்கும் முஸாமில் சையத் (19) என்பவர் தொடர்பு, கிடைத்தது. சையத், ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்தவர். இருவரும் கடந்த 3 மாதத்துக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாயினர். பின்னர் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்துள்ளார் சையத். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார் மான்சி.
அப்போது அவர்களுக்குள் என்ன பிரச்னையோ தெரியவில்லை. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஆயுதத்தால் மான்சியை தாக்கியுள்ளார் சையத். இதில் மயங்கி விழுந்த அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் மான்சியின் உடலை சூட்கேஸ் ஒன்றுக்குள் மடக்கி திணித்துள்ளார்.
பிறகு ஓலோ காரை ஆப் மூலம் புக் செய்தார் சையத். கார் வந்ததும் டிக்கியில் அந்த சூட்கேஸை போட்டுவிட்டு விமான நிலையம் செல்ல வேண்டும் என்று சொன்னார் சையத். டிரைவர் காரை இயக்கினர். சிறிது தூரம் சென்றதும் காரை, மலாடுக்குத் திருப்பச் சொன்னார். திருப்பினார் டிரைவர்.
மலாடு அருகே சென்றபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்த சொன்ன சையத், சூட்கேஸை இறக்கிவிட்டு ஓலா டிரைவரை அனுப்பிவிட்டார். பிறகு அந்தப் பகுதியின் ஓரத்தில் சூட்கேஸை போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார்.
அந்த ஓலா டிரைவர், அடுத்த சில நிமிடங்களிலே அந்த இடத்துக்குத் திரும்பி வந்து பார்த்தார். சையத் கொண்டு வந்த சூட்கேஸ் ஓரத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார். அவர்கள் விரைந்து வந்து அதைத் திறந்து பார்த்தனர். உள்ளே இளம் பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்குள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்தனர். அப்போது சையத், சூட்கேஸை போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிச் செல்லும் காட்சிப்பதிவுகள் கிடைத்தன. விரைந்து செயல்பட்ட போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று சையத்தை அமுக்கி கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு தகவலை சொல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி போலீசில் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வீட்டுக்கு மான்சியை அழை த்தேன். வந்துவிட்டார். வீட்டில் யாரும் இல்லை. இதனால் தகாத உறவில் ஈடுபட அவரை அழைத்தேன். அவர் மறுத்தார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் கோபமாக பேசியதால், அருகில் இருந்த ஸ்டூலை எடுத் து தாக்கினேன். இதில் அவர் மயக்கமானார். பிறகு பயந்து போய், தண்ணீரை தெளித்து உசுப்பினேன். அவர் மயக்கம் தெளிந்தது. சிறிது நேரத்தில் அம்மா வந்து கேட்டால் என்ன சொல்வது என்று பயம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்றேன். பிறகு சூட்கேஸுக்குள் உடலை அழுக்கினேன். ஓலோ காரை வாடகைக்கு அழைத்து சூட்கேஸை மலாடு அருகே ஓரமாக வீசிவிட்டு தப்பிக்க நினைத்தேன் ’ என்று தெரிவித்துள்ளார்.
போலீசார் கூறும்போது, ‘20-ம் தேதி வரை போலீஸ் காவல் இருக்கிறது. இந்தக் கொலையை அவர்தான் செய்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பது பற்றி இன்னும் விசாரி த்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதை சொல்லிவருகிறார் சையத்’ என்றனர்.