சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல சாமியார் ஆசாராம் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பாதுகாப்பை கருதி சாமியார் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்ற நீதிபதி மதுசூதன், ஆசாராம் உள்பட 3 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று தெரிகிறது. ஆசாராமிற்கு ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் ஆதரவாளர்கள் ஏராளமானோர் உள்ளதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.