“முஸ்லிம்கள் மீதான வெறுப்புக்கு காரணமே இந்துத்துவாதான்” - மோகன் பகவத் மீது ஓவைசி சாடல்

“முஸ்லிம்கள் மீதான வெறுப்புக்கு காரணமே இந்துத்துவாதான்” - மோகன் பகவத் மீது ஓவைசி சாடல்
“முஸ்லிம்கள் மீதான வெறுப்புக்கு காரணமே இந்துத்துவாதான்” - மோகன் பகவத் மீது ஓவைசி சாடல்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை குறிவைத்தவர்கள் காட்டிய வெறுப்பு இந்துத்துவத்தின் விளைவுதான் என ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "பசு புனிதமான விலங்கு தான். ஆனால் கொலை செய்பவர்கள் இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் உள்ளது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், நாம் அந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.

இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல. இந்தியத் தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான். எனவே, இந்துக்களும், இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கனவே இணைந்து தான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்குப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.” என்றார்.

இந்நிலையில், மோகன் பகவத் கருத்து பதிலளிக்கும் வகையில் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி ட்வீட் செய்துள்ளார். அதில், “வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மாட்டிற்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் ஜுனைத், அக்லக், பெஹ்லு, ரக்பார் மற்றும் அலிமுதீன் போன்ற பெயர்களைக் கொண்டவர்களை கொலை செய்ய நன்கு தெரியும். பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை குறிவைத்தவர்கள் காட்டிய வெறுப்பு இந்துத்துவத்தின் விளைவுதான்.

அலிமுதீன் அன்சாரியை கொலை செய்தவர்களுடன் மத்திய அமைச்சர் புகைப்படம் எடுக்கிறார். அக்லக்கின் கொலையாளியின் உடலின் மீது முக்கோணம் வைக்கப்படுகிறது. ஆசிப்பைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக ஒரு மகாபஞ்சாயத்து கூட்டப்படுகிறது. ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் "நாங்கள் கொலை செய்யக்கூட முடியாதா?" என்று கேட்கிறார். கோழைத்தனம், வன்முறை மற்றும் கொலை ஆகியவை கோட்சேவின் இந்துத்துவ சிந்தனையின் ஒரு பகுதியாகும். இந்த சிந்தனையின் விளைவே முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜயா சிங்கும் பகவத் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “மோகன் பகவத் அவர்களே, இந்த கருத்துக்களை உங்கள் சீடர்கள், சாமியார்கள், விஸ்வ இந்து பரிஷத் / பஜ்ரங் தள தொழிலாளர்களுக்கும் அனுப்புவீர்களா? இந்த போதனைகளை நீங்கள் மோடி, அமித்ஷா மற்றும் பாஜக முதல்வருக்கும் அனுப்புவீர்களா?

நீங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், அப்பாவி முஸ்லிம்களை துன்புறுத்திய பாஜகவில் உள்ள அனைத்து தலைவர்களையும் உடனடியாக அவர்களின் பதவிகளில் இருந்து நீக்க உத்தரவுகளை பிறப்பியுங்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரிடம் இருந்து தொடங்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com