ஆட்டோவை அனுமதிக்காத போலீஸ் - ஒரு கிலோ மீட்டர் தூரம் தந்தையை தோளில் சுமந்துச் சென்ற மகன்

ஆட்டோவை அனுமதிக்காத போலீஸ் - ஒரு கிலோ மீட்டர் தூரம் தந்தையை தோளில் சுமந்துச் சென்ற மகன்
ஆட்டோவை அனுமதிக்காத போலீஸ் - ஒரு கிலோ மீட்டர் தூரம் தந்தையை தோளில் சுமந்துச் சென்ற மகன்

கேரளாவில் மருத்துவமனையில் இருந்து ஆட்டோ நிற்கும் இடத்திற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தனது ‌தந்தையை மகன் தூக்கி‌ச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உல்கம் முழுவதும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உட்பட பலர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எத்தனையோ பேர் நடந்தே தங்களது ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதில் பலர் வழியிலேயே தங்களில் உயிரை இழந்து வரும் கொடூர சம்பவங்களையும் காணமுடிகிறது. ஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் மக்களுக்கு போலீசார் பலர் உதவி செய்யும் செயலும் இல்லாமல் இல்லை. தங்களால் முடிந்த உதவிகளை போலீசார் செய்து கொண்டுதான் வருகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் பல்வேறு தரப்பு மனிதர்களிடமும் மனிதாபிமானத்தை காணமுடிகிறது என்றால் அது மிகையல்ல.

கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிவரை சைக்கிளில் வந்த தம்பதிக்கு சிகிச்சை அளித்து மீண்டும் அவர்களை ஆம்புலன்சில் அனுப்பி வைத்த மருத்துவமனை பாதுகாவலர்கள், திருவாரூரில் இருந்து பசியோடு சென்னை திரும்பிய நரிக்குறவரகளுக்கு உணவு வாங்கி கொடுத்து லாரியில் அனுப்பி வைத்த கொள்ளிடம் போலீசார் போன்றவர்கள் இதற்கு குறைந்தளவு உதாரணங்களே...

ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தந்தையை அழைத்து செல்ல தனது ஆட்டோவையே போலீசார் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டுக்கிறார் கேரளாவை சேர்ந்த ராய்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் ஜார்ஜ் என்பவர் புனலூ‌ரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது மகன் ராய் அவரை வீட்டிற்கு அழைத்து வர தனது ஆட்டோ ரிக்ஷாவுடன் சென்றார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோவை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால் காவல்துறையினர் தடு‌த்து நிறுத்தினர்.

இதனையடுத்து மருத்துமனையில் இருந்து ஆட்டோ நிற்கும் இடத்திற்கு தந்தையை அவரது மகன் ராய் தனது தோளில் சுமந்து கொண்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெ‌ளியாகி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

இதுகுறித்து மகன் ராய் கூறுகையில், “ இதுபோன்ற சூழ்நிலையில் தனது தந்தையை அழைக்க ஆட்டோவை போலீசார் அனுமதித்திருக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே ஆட்டோவை நிறுத்தி விட்டனர்” என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அப்பகுதி போலீசார் கூறுகையில், “குறைந்த அளவிலான வாகனங்கள் இயங்குவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் உண்மையான தேவைகளுடன் பயணிக்கும் எவரையும் சந்திக்கவில்லை” எனக் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com