வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘... ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘... ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி
வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘... ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

இந்திய ராணுவ வீரர்களுக்கு என்று செய்தி அனுப்பும் பிரத்யேகமாக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

வாட்ஸ்-அப் போன்றே செயல்படக்கூடிய, ‘செக்யூர் அப்ளிகேஷன் பார் தி இன்டர்நெட்’ (சாய்) என்னும் பெயர் கொண்ட ஒரு பாதுகாப்பான தகவல் செயலியை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் வழியாக குரல், எழுத்து மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முடியும். தற்போது எளிதாக கிடைக்கக்கூடிய வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளைப் போன்றே, துவக்கம் முதல் இறுதி வரை பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் என்பதை இந்த செயலியும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் நமக்கு ஏற்ற வகையில் பயன்படக்கூடிய முழுக்க இந்தியாவிலேயே செயல்படக்கூடிய சர்வர்கள், தனிப்பட்ட கோடிங் முறை உள்ளிட்டவற்றால் இது வேறுபட்டு சிறப்பானதாக விளங்குகிறது.

ராணுவ சைபர் பிரிவு மற்றும் ‘சேர்ட்-இன்’ குழுவில் உள்ள சிறப்புத் தணிக்கையாளரால் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவுசார் சொத்துரிமை கோரி விண்ணப்பித்தல், தகுந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்ட இதர இயங்கு தளங்களில் செயல்படும் வகையில் வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலி மூலம் இனி நாடு தழுவிய வகையில் ராணுவ வீரர்களுக்கான தகவல் பரிமாற்றம் முழுமையாக நடைபெறும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com