டெல்லி |2026இன் முதல் இரண்டு வாரம்.. 807 பேர் மாயம்.. போலீஸ் ஆவணங்களில் அதிர்ச்சித் தகவல்!
தலைநகர் டெல்லியில் 2026ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 807 நபர்கள் மாயமாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் 2025ஆம் வருடத்தில் 24,508 நபர்கள் காணாமல் போனதாக டெல்லி காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 புது வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 807 நபர்கள் தலைநகரில் மாயமானது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இப்படி அதிக எண்ணிக்கையில் காணாமல் போன நபர்கள் குறித்த புகார்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்படுவதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் 2.32 லட்சம் நபர்கள் மாயமானதாகவும் டெல்லி காவல் துறை புள்ளி விவரங்களில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25,000 நபர்கள் காணாமல் போனதாக காவல்துறை புகார் பதிவு செய்துள்ளது. உதாரணத்துக்கு 2024ஆம் வருடத்தில் 24,893 நபர்கள் தலைநகர் டெல்லியில் மாயமானதாக டெல்லி காவல்துறை தரவுகளில் தகவல் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2023இல் கா ணாமல் போன நபர்களின் எண்ணிக்கை 25,088. தலைநகர் டெல்லியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் புலம் பெயர்வதால்,காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை புலனாய்வு செய்வதில்சிக்கல்களைச் சந்திப்பதாக டெல்லி காவல் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடித்து பெற்றோருடன் சேர்ப்பது சவாலான காரியமாக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர். உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்கள் டெல்லியை ஒட்டி உள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லைகளும் அதிக தூரத்தில் இல்லை. இதனால் காணாமல் போன நபர்கள் மட்டுமின்றி, காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிப்பதும் சவாலாக உள்ளது என டெல்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் காணாமல் போனவர்களில் 60% பெண்கள் மற்றும் சிறுமிகள் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வருடமும் காணாமல் போனவர்களில் ஒரு பாதி நபர்களைக்கூட கண்டுபிடிக்க முடியாத சூழலே இதுவரை நிலவுகிறது. காணாமல் போனவர்களில் பலர் பல்வேறு காரணங்களால் தாங்களாகவே வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், சிறார்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் கடத்தல் வழக்குகளாகவே காவல் துறையினர் கையாளுகின்றனர். தலைநகர்டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி நிறுவப்பட்டுள்ள போதிலும்,காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் பாதிக்கு மேல் நிலுவையிலே இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

