நாளை காட்சியளிக்க போகும் ‘பிங்க் நிலா’ - பொதுமக்கள் ஆர்வம்
நாளை வரும் முழு நிலவு சற்று பிரகாசமாக காட்சி அளிக்கும் பெரிய நிலவாக இருக்கும் என்பதால் நிலவைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சாதாரண பவுர்ணமி நிலவை விட ஏப்ரல் மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளை வரும் முழு நிலா 'பிங்க் நிலா’ என்று அழைக்கப்படுகிறது. பிங்க் நிலா என்பதால் இது பிங்க் கலரில் இருக்காது.
ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டால் அமெரிக்காவில் வசந்தகாலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் பிங்க் நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கும். அதே நேரத்தில் வரும் முழு நிலவு என்பதால் இதனை அமெரிக்க பழங்குடியின மக்கள் ’பிங்க் நிலா’ என அழைக்கின்றனர். இந்த நிலவுக்கு புல் நிலா, முட்டை நிலா, மீன் நிலா என்றும் பெயர்கள் உள்ளன.
இந்திய நேரப்படி நாளை மாலை 4.42 மணியிலிருந்து பிங்க் நிலா தெரியுமென்று கூறப்படுகிறது. பிங்க் நிலாவை வெறுங்கண்ணாலே பார்த்து ரசிக்க முடியுமென்றும் தொலைநோக்கி மூலம் பார்த்தால் அதன் அழகை இன்னும் நெருக்கமாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை தயார் நிலையில் வைத்துக்கொண்டு நாளை வரவுள்ள அழகான நிலாவை படம் பிடித்துக்கொள்ள வேண்டுமென்று நிலா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.