இறந்த சிறுமியின் உடலுக்கு ரூ.9 லட்சம் கேட்ட மருத்துவமனை
டெல்லியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஒன்று இறந்த சிறுமியின் உடலை தந்தையிடம் ஒப்படைக்க ரூ.9 லட்சம் கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள பிஎல் கபூர் பல்நோக்கு மருத்துவமனையில், நீராஜ் என்பவர் தனது ஒன்பது வயது மகளை எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதையடுத்து சில நாட்களில் அந்த சிறுமிக்கு உடல்நிலை மோசமடைந்ததுடன், சுவாசக்கோளாறுகள் மற்றும் கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீராஜ் கேட்டபோது, சிறுமி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் தந்தை நீராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே தனது மகள் இறந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் இறந்து குழந்தையின் உடலை பெற வேண்டுமென்றால் ரூ.9 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை கூறியிருப்பது பெற்றோர் மற்றும் அனைவரின் தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதே வாரத்தில் இரட்டை குழந்தைகள் இறந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.