அடுத்தடுத்து சந்திரசேகர ராவ் கட்சிக்கு தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
தெலுங்கானாவில் ஏற்கனவே சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவியுள்ள நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ தாவ உள்ளார்.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் கட்சியிலிருந்து விலகி சந்திரசேகர ராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில் அதிகரித்தது. அவ்வாறு சேரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு சேர்வதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தெலுங்கானா ஆளுநர் நரசிம்மனிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. அதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மீது, தங்கள் எம்.எல்.ஏக்களை ஈர்த்துக்கொள்வதாக குற்றமும் சாட்டியது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திரசேகர ராவ் கட்சிக்கு தாவுகிறார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியினர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட தகவலில், எல்லாரெட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜஜுலா சுரேந்தர் டி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவை சந்தித்தாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் டி.ஆர்.எஸ் அரசின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஏற்றுக்கொண்டு அவர் தங்கள் கட்சியில் சேர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், சுரேந்தர் 10வது எம்.எல்.ஏ ஆவார்.