பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல்.. மேலும் ஒரு எம்எல்ஏ விலகினார்..!
பஞ்சாப்பில் மேலும் ஒரு எம்எல்ஏ ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ரூபாநகர் தொகுதி எம்எல்ஏ அமர்ஜித் சிங் சந்தோ. ஆம் ஆம்மி கட்சி எம்எல்ஏவான இவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகி அம்மாநில முதலமைச்சரான அமரிந்தர் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மான்சா தொகுதி எம்எல்ஏவான நாசர் சிங் கடந்த 29-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அமர்ஜித் சிங் சந்தோ கூறும்போது, “ ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி மிகுந்த அடக்குமுறை உணர்வுடன் செயல்படுகிறது. மக்களை நோக்கிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியால் அக்கட்சியில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
அமர்ஜித் சிங் சந்தோவின் வருகையை வரவேற்றுள்ள அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் வலுவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.