74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அதிசயம் ! மருத்துவர்கள் சாதனை

74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அதிசயம் ! மருத்துவர்கள் சாதனை

74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அதிசயம் ! மருத்துவர்கள் சாதனை
Published on

ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.


ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ்(80). இவரது மனைவி மங்கயம்மா(74). இவர்கள் இருவருக்கும் கடந்த 1962ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காததால், செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பேறு பெற முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனைத் தொடர்ந்து திருமணமாகி 57 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதியினருக்கு ஆந்திராவிலுள்ள மருத்துவமனையில் 55 வயது மிக்க பெண் ஒருவர் செயற்கை முறையில் குழந்தை பெற்றது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து மங்கயம்மா இந்த மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரிப்பிற்கு சிகிச்சை பெற ஆரம்பித்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை 10.30 மணிக்கு இவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதன்மூலம் அதிக வயதில் குழந்தையை பெற்றுக்கொண்ட இந்திய மூதாட்டி என்ற சாதனை இவர் படைத்துள்ளார். 

இது குறித்து மருத்துவர் உமாசங்கர் கூறியது " மங்கயம்மாவுக்கு அறுவை சிகிச்சை பிரச்னையின்றி நடந்தது. தாயும் சேயும் நலமுடனே இருக்கின்றனர். ஆனாலும் மங்யம்மாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், வயோதிகம் காரணமாக குழந்தைகளுக்கு அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியாது. இதனால் மருத்துவமனையின் சார்பில் இருந்து தாய்ப்பால் வங்கியில் இருந்து பெறப்பட்டு குழந்தைகளுக்கு கொடுக்கப்படும். மங்கயம்மாவுக்கு மாதவிடாய் நின்று 25 ஆண்டுகள் ஆகிறது, ஆனாலும் தான் தாயாகிவிட வேண்டும் என்ற தீரா ஆசையில் அவர் இருந்தார்".

மேலும் தொடர்ந்த அவர் "வயதாகிவிட்டாலும் மங்கயம்மா ஆராக்கியமான உடல் நலத்துடன் இருந்தார். பின்பு அவரின் கணவரான ராஜா ராவின் உயிர் அணுக்களை வைத்து, வேறு ஓர் பெண்ணின் கரு முட்டையை வைத்து ஐ.வி.எஃப். முறையில் மங்கயம்மாவுக்கு கடந்த ஜனவரி மாதம் செலுத்தப்பட்டு, இப்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்" என்றார் மருத்துவர் உமாசங்கர்.

இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் தனது 70ஆவது வயதில் ஆண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தார். இதுவரை இவரே அதிகமான வயதில் குழந்தை பெற்ற இந்திய மூதாட்டி என்ற சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள சூழலில் இளம் வயதினருக்கே குழந்தைப்பேறு பெறுவது கடினமாக இருக்கிறது. இதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் இருக்கிறது.

இதேபோல பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செயற்கை கருத்தரிப்பு முயற்சியிலும் தோற்றவர்கள், அரசு காப்பங்களில் குழந்தையை தத்தெடுக்கின்றனர். ஆனால் அதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், நடுத்தர வர்கத்தினர் பலருக்கு குழந்தைபேறு எட்டா கனவாகவே இருக்கிறது. ஆனால் 74 வயதில் மங்கயம்மா இரட்டை குழந்தைக்கு தாயானது, இத்தனை ஆண்டுக்காலம் அவர்களின் காத்திருப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த ஆத்மார்த்தமான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com