“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். உயிரிழந்த வீரர்களின் மாநிலங்களை சேர்ந்த அந்தந்த முதலமைச்சர்கள் நிவாரண உதவி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். 

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இரண்டு வீரர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு ஆந்திர அரசு முழு ஆதரவு அளிக்கும் எனவும் வீரர்கள் செய்த தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் எனவும் தெரிவித்தார். நாடே அதிர்ச்சியடைந்துள்ளது எனவும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் தோள்கொடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com