ஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை

ஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை
ஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஆளுநரிடம் புகார் அளித்த மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் மருத்துவம் முதுகலை பட்டம் படித்து வந்தவர் மனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரிடம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் டாக்டர் கிரித்தி, டாக்டர் ரவிக்குமார் மற்றும் டாக்டர் சசிக்குமார் ஆகிய பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக மனிஷா கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இறுதியாக ஆளுநருக்கு கடிதம் எழுதி புகார் தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை கல்லூரி நிர்வாகத்திடம் பதிலளிக்க உத்தரவிட்டது. கல்லூரி முதல்வர் ரமனய்யா மற்றும் பேராசிரியர்கள் கூறும்போது, மனிஷா தனது பிரச்னை தொடர்பாக எதுவும் விளக்கவில்லை என்று தெரிவித்தனர். அத்துடன் அவர் யார் மீதும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் ரமனய்யா கூறுகையில், மனிஷா தனது புகார் தொடர்பாக காவல்துறையினரிடம் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் அப்பெண் தனது செய்முறை தேர்வில் கவனம் செலுத்த மட்டுமே நினைப்பதாக கூறினார் என்றும் ரமனய்யா குறிப்பிட்டார். 

டாக்டர் ரவிக்குமார் கூறும்போது, மனிஷா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தால் தான் அவர் குற்றம்சாட்டியதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி கடந்த தேர்வில் மனிஷா 8 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மனிஷா தனது அறையில் இருந்த, மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.  தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சீறிய நடவடிக்கை எடுக்க சிஐடி துறைக்கு, ஆந்திர டிஜிபி ஆர்பி தகூர் உத்தரவிட்டுள்ளார். மனிஷா குற்றம்சாட்டிய டாக்டர்களில் ரவிக்குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல; மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com