ஆந்திரா: ஆன்மீகத்தின் பெயரில் பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு நீதிமன்றம் ஜாமீன்
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரது மனைவி பத்மஜா. தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அலெக்கியா (27), சாய் திவ்யா (22) என்ற இரு மகள்கள் இருந்தனர். இத்தம்பதியினர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வீட்டில் பூஜைகள் செய்து கொண்டிந்தபோது, முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அவரது பெற்றோர் அடித்துக் கொன்றனர். பின்னர் மகள்களை பூஜை அறையில் நிர்வாணமாக கிடத்தி சிறப்பு பூஜை செய்தனர்.
வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்திய போது, புருஷோத்தம், பத்மஜா இருவரும், 'நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள்' என கூறினார்.
இதையடுத்து பூஜை அறையில் நிர்வாண நிலையில் கிடந்த 2 மகள்களின் சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, புருஷோத்தம், பத்மஜா இருவரையும் கைது செய்தனர் போலீசார். இந்நிலையில், இவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், சிகிச்சைக்குப்பின் மீண்டும் கடந்த மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பிணை வழங்கக்கோரி இவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தை நாடினர். வழக்கில், இருவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.